வீடுகளைக் காலி செய்ய மறுக்கும் மேனாள் நா.ம.உ.க்கள்;
வீடின்றித் தவிக்கும் அமைச்சர்!
புதுடில்லி : செப்.20-2019
மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணையமைச்சரான ஜி.கே.ரெட்டிக்கு அரசு சார்பில் 2 வீடுகள் ஒதுக்கப்பட்டிருந்த போதிலும், அவர் கடந்த 4 மாதங்களாக டில்லி ஆந்திர பவனில் தங்கி இருந்தே தனது பணிகளைக் கவனித்து வருகிறார்.
அமைச்சர் ஜி.கே.ரெட்டிக்காக ஒதுக்கப்பட்ட வீடுகளில் முன்னாள் நா.ம.உ.க்கள் தங்கியுள்ளனர். அதனால், புதிய அரசு ஆட்சியமைத்து நான்கு மாதங்களான பிறகும் அவர்கள் அரசு வீடுகளைக் காலி செய்யாமல் இருந்து வருகின்றனர். பொதுவாக, நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட ஒரு மாதத்தில் முன்னாள் நா.ம.உ.க்கள், அரசு வீடுகளை விட்டு வெளியேற வேண்டும் என்பது விதி.
16-ஆம் மக்களவை 2019 மே 25 அன்று கலைக்கப்பட்ட நிலையில், அனைத்து அரசு வீடுகளும் ஜூன் 25 அன்று காலி செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் புதிய மக்களவை உறுப்பினர்கள் பொறுப்பேற்று நான்கு மாதங்களான பிறகும், பழைய நா.ம.உ.க்கள் வீடுகளைக் காலி செய்யாமல் உள்ளனர். இதனால், புதிய நா.ம.உ.க்கள் பலர் தற்காலிக வீடுகளிலேயே வசித்து வருகின்றனர்.
மத்திய உள்துறை இணையமைச்சராக இருக்கும் ஜி.கே.ரெட்டிக்கு முதலில் ஒதுக்கப்பட்ட வீட்டில் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா வசித்து வருவதால், வேறு வீடு ஒதுக்கப்பட்டது. பா.ஜ. தலைமை அலுவலகத்துக்கு எதிரே அமைந்துள்ள இந்த வீட்டில் வசித்து வரும் ராதா மோகன் சிங்கும் வீட்டைக் காலி செய்ய அவகாசம் கேட்டுள்ளதால், ஜி.கே.ரெட்டி தற்போது வரை ஆந்திர பவனிலேயே வசித்து வருகிறார்.
முன்னாள் நா.ம.உ.க்கள் குடியிருந்து வரும் அரசு இல்லங்களை உடனே காலி செய்ய வேண்டும் என, கடந்த மாதமே அரசு உத்தரவிட்டிருந்தது. இதற்காக ஏழு நாட்கள் கெடு விதிக்கப்பட்டிருந்த நிலையில், இதற்கு முன்பே அவர்கள் குடியிருக்கும் வீடுகளுக்குத் தண்ணீர் மற்றும் மின்சார வசதி நிறுத்தப்பட்டது. இருந்தும் பழையவர்கள் இதுவரையில் வீடுகளைக் காலி செய்யவில்லை.
இவர்கள், மாட்சிமை மிக்க இந்திய அரசின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடப்பதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டவர்கள் மட்டுமல்ல; மக்களுக்கான சட்டங்களை இயற்றியோரும் இவர்கள் தான்.