தமிழகத்தில் 2 நாட்களுக்குக் கனமழை!


தமிழகத்தில் 2 நாட்களுக்குக் கனமழை!


வானிலை மையம் தகவல்


சென்னை: செப்.22-2019


ளிமண்டல மேலடுக்குச் சுழற்சியால் சென்னையில் இன்றும் பல இடங்களில் மழை பெய்தது. மேலும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் வருகிற 24, 25 தேதிகளில் மிகவும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாகப் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த 18-ஆம் தேதி ஒரே நாளில் திருவள்ளூரில் 22 செ.மீ. மழை பெய்தது. இதேபோல், தமிழகத்தின் வேறு சில இடங்களிலும் மழை பெய்து கொண்டு இருக்கிறது.


இந்த நிலையில் வங்கக் கடலில் உருவான வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி, சென்னைக்கு அருகே வந்து அரபிக்கடல் பகுதிக்குச் சென்று விட்டது. இந்த மேலடுக்குச் சுழற்சியால் தான் கடந்த 2 நாட்களாக நல்ல மழை பெய்தது.


சென்னையில் இன்று ஆங்காங்கே இடியுடன் பலத்த மழை பெய்தது. பாரிமுனை, பெசன்ட் நகர், திருவல்லிக்கேணி, ஆழ்வார்பேட்டை, அயனாவரம், சூளைமேடு, அம்பத்தூர், கொடுங்கையூர், மூலக்கடை, வண்ணாரப்பேட்டை உள்பட பல இடங்களில் மழை பெய்தது.


தற்போது வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியொன்று சென்னைக்கு அருகே இருக்கிறது. இதன் காரணமாகத் தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதுகுறித்துச் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் என்.புவியரசன் கூறியதாவது:-


சென்னைக்கு அருகே நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், உள் மற்றும் மத்திய மாவட்டங்களில் சில இடங்களில் 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும்.


திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, வேலூர், இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 14 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்.


மேலும் ஒரு மேலடுக்குச் சுழற்சி வங்கக்கடலில் உருவாகி, சென்னைக்குக் கீழே நாளை (23ஆம் தேதி) இரவு வருகிறது. இதனால் வருகிற 24, 25 தேதிகளில் சில இடங்களில் மிகவும் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.


குறிப்பாக, சென்னை, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், சிவகங்கை, சேலம் மாவட்டங்களில் பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகக் கணிக்கப்பட்டு இருக்கிறது என்றார்.