விக்ரம் லேண்டரின் வாழ்நாள் இன்று முடிகிறது!


விக்ரம் லேண்டரின் வாழ்நாள் இன்று முடிகிறது!


பெங்களூரு: செப்.20-2019


விக்ரம் லேண்டரின் வாழ்நாள் இன்றுடன் முடிகிறது. அறிவியலாளர்கள் எடுத்த முயற்சி பயனளிக்கவில்லை.


சந்திரயான்-2 விண்கலம் இந்தியாவில் மட்டுமல்ல, உலகமெங்கும் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடும் அத்தனை நாடுகளிலும் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதற்குக் காரணம், வளர்ந்த நாடுகளால் கூட இதுவரை தரையிறங்கி ஆராய்ச்சி மேற்கொள்ளப்படாத, நிலவின் தென் துருவத்தைச் சந்திரயான்-2 விண்கலம் குறி வைத்தது தான். 


முடிவு செய்தபடி, ஒவ்வொரு கட்டத்தையும் விக்ரம் லேண்டர் அருமையாகக் கடந்து கொண்டிருந்தது. கடந்த 7-ஆம் தேதி அதிகாலையில் நிலவின் தென் துருவப் பகுதியில் விக்ரம் லேண்டர் தரையிறங்கி விடும் என்று, ஒட்டுமொத்த உலகமும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. அன்று அதிகாலை 1.30 மணியில் இருந்து விக்ரம் லேண்டரைச் சரியாக தரையிறக்கும் நடவடிக்கையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டனர்.


கடினமான இடங்களை எல்லாம் கடந்து, இறங்க வேண்டிய இடத்தை அடைவதற்கு 2.1 கி.மீ. தொலைவே இருந்தபோது, விக்ரம் லேண்டருக்கும், இஸ்ரோ கட்டுப்பாட்டு அறைக்கும் இடையேயான தகவல் தொடர்பு துண்டித்துப் போனது. இது இஸ்ரோவுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகத்துக்கும் மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது,


இனி என்ன செய்வது? விக்ரம் லேண்டரின் வாழ்நாள் 14 நாட்கள் தான். இனி என்ன நடக்கும்? இப்படிப் பல கேள்விகளுடன் விஞ்ஞானிகள் பதற்றத்தில் இருந்தனர். அடுத்த 2 நாளில் சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டர் படம் எடுத்து அனுப்பியது. அதில், விக்ரம் லேண்டர் அதன் நான்கு கால்களில் நிற்காமல், ஒரே துண்டாக விழுந்து சாய்ந்து கிடப்பது தெரிய வந்தது.


இதையடுத்து விக்ரம் லேண்டருடனான தொடர்பை மீட்டெடுக்கும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். இந்த முயற்சியில் இஸ்ரோவுடன் அமெரிக்காவின் நாசாவும் இறங்கியது. நாசாவின் ஜெட் புரபல்சன் லேபரட்டரி, விக்ரம் லேண்டருக்கு ஹலோ என்னும் செய்தியை, ரேடியோ சிக்னல்கள் மூலம் அனுப்பிப் பார்த்தது. ஆனால் அதற்குப் பதில் இல்லை.


இந்நிலையில் தான் கடந்த 17 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நாசாவின் எல்.ஆர்.ஓ. ஆர்பிட்டர், விக்ரம் லேண்டர் விழுந்துள்ள இடத்துக்கு மேலே வரும், அதன் கேமராக்கள் விக்ரம் லேண்டரைப் படமெடுத்து அனுப்பும் எனத் தகவல்கள் வெளிவந்தன.


ஆனால் விக்ரம் லேண்டர் விழுந்து கிடந்த இடத்தில் போதிய வெளிச்சம் இல்லாமல் போனதால் படமெக்க முடியவில்லை என்று நாசா கூறுகிறது.  இருப்பினும் அந்தப் பகுதியை எல்.ஆர்.ஓ. ஆர்பிட்டர் படங்களை எடுத்து அனுப்பியிருக்கிறது. அவற்றை நாசா விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகிறார்கள். இதை எல்.ஆர்.ஓ. ஆர்பிட்டர் துணைத் திட்ட விஞ்ஞானி ஜான் கெல்லர் உறுதி செய்திருக்கிறார். ஆனாலும் அதை வைத்துப் பெரிதாக எதையும் சாதிக்க வாய்ப்பில்லை.


ஏனென்றால் விக்ரம் லேண்டரின் ஆயுள் காலமான 14 நாட்கள் இன்றுடன் முடிகிறது. மீண்டும் அதனுடன் தொடர்பு கொள்ளும் முயற்சிகள் பயனைத் தரவில்லை. நிலவின் தென் துருவத்தை ஆராய்ந்து புதிய வரலாறு படைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட விக்ரம் லேண்டர், கனவாகக் கலைந்திருக்கிறது.


இந்தத் திட்டத்தில் தங்களோடு தோளோடு தோளாக நின்ற மக்களுக்கு நன்றி சொன்ன இஸ்ரோவின் வார்த்தைகள் இங்கு நினைவுகூரத் தக்கவை. “உலகமெங்கும் உள்ள இந்தியர்களின் நம்பிக்கையாலும், கனவுகளாலும் நாங்கள் ஊக்கம் பெற்று முன்னோக்கி நடப்பதைத் தொடர்வோம். வானையே எப்போதும் நாங்கள் இலக்காகக் கொள்வோம்” என்னும், இஸ்ரோ விஞ்ஞானிகளின் கனவுகள் எதிர்காலத்தில் மெய்ப்படும்.