ஆயுதங்களுடன் மோதிக்கொண்ட கல்லூரி மாணவர்கள்!
சென்னை: செப்.21-2019
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆயுதங்களைப் பயன்படுத்தி மோதிக்கொண்ட இருவேறு கல்லூரிகளைச் சேர்ந்த 9 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை அரும்பாக்கத்தில் கடந்த ஜூலை மாதம் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ரூட் தல தொடர்பாக மோதல் ஏற்பட்டது. இதில் சில மாணவர்கள் பட்டாக்கத்தியுடன் பயணம் செய்த, வேறு சில மாணவர்களைக் கண்மூடித் தனமாகத் தாக்கினர். இந்த நிகழ்வு தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து இந்நிகழ்வில் தொடர்புடைய நான்கு மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அவர்களைக் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து ரூட் தல மாணவர்களின் அடாவடிச் செயல்களைத் தடுத்து நிறுத்தும் வகையில், காவல்துறை உயர் அதிகாரிகள், தொடர்புள்ள கல்லூரி முதல்வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையொட்டி, ரூட் தல மாணவர்களைக் காவல் துரையினர் அழைத்துச் சென்று விசாரித்த போது, மாணவர்கள் அனைவரும், இதுபோன்ற விரும்பத்தகாத செயல்களில் இனிமேல் ஈடுபட மாட்டோம் என உறுதிமொழி எடுத்தனர். இதற்குப் பிறகு மாணவர்களிடையே அமைதி நிலவிய நிலையில், நேற்றுத் திடீரென மோதல் வெடித்தது. நேற்று மாலை சென்னை இராஜாஜி சாலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் 20-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது.
இந்த மாணவர்கள் கையில் பட்டாக்கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வலம் வந்தனர். பின்னர் அங்கிருந்து கலைந்து கடற்கரை தொடர்வண்டி நிலையத்துக்கு வந்தனர். அங்குச் சுற்றித் திரிந்த மாணவர்களைக் கண்ட, அப்பகுதி பொதுமக்கள் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். உடனே விரைந்து வந்த எழும்பூர் தொடர்வண்டிக் காவல் துறையினர், 9 மாணவர்களைப் பிடித்து விசாரித்தனர். அப்போது, மோதலில் ஈடுபட்டவர்கள், மாநிலக் கல்லூரி மாணவர்கள் எனத் தெரிய வந்தது.
மேலும், மோதலில் ஈடுபட்டவர்களில் ஒரு பிரிவினர், வாட்ஸ்-அப் குழுவை உருவாக்கி, அதில், மற்றொரு பிரிவு மாணவர்களைத் தாக்குவதற்காகத் தகவலைப் பரிமாறிக் கொண்டது தெரிய வந்தது. இதில் இரண்டு குழுக்களைச் சேர்ந்த மாணவர்களிடையே இருந்த முன்பகை, நேற்றுப் பொது இடத்தில் மோதலாக வெடித்தது தெரிய வந்தது. இதையடுத்து, பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் செயலில் ஈடுபட்டதாக, அந்த 9 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவர்களைக் கைது செய்தனர்.
வன்முறையில் ஈடுபடக் கூடாது என, கல்லூரி மாணவர்களிடையே காவல் துறையினர் அவ்வப்போது விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். ஆனாலும், மாணவர்கள் இதுபோன்ற குற்றச் செயலில் ஈடுபடுவது வாடிக்கையாக உள்ளது. மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு முறையும் காவல் துரையினர் அறிவுரை கூறி அனுப்புவதை, தங்களுக்கு வாய்ப்பாகப் பயன்படுத்தி மாணவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவது வருத்தம் அளிப்பதாகப் பொதுமக்கள் தெரிவித்தனர்.